ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானத்தை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும். இதுகுறித்து கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் கூறுகையில், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் விமானங்களை ஒருங்கிணைப்பது தொடர்பான சோதனை தொடங்கி உள்ளது.
முதலில் போர் விமானம் இறங்கும் முறையை பரிசோதிக்க வேண்டும். இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்தப் பணிகள் முடிய 6 முதல் 8 மாதங்கள் ஆகும். இதன்படி அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் போர் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.