நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக ஃபின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் ஃபின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது. "நாளை முதல், ஃபின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் ஃபின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். ஃபின்லாந்து பாதுகாப்பு, நார்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்," என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.
ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.














