ஈராக்கில் உள்ள ஹம்தானியா என்ற நகரத்தில், நேற்று திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு திருமண மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் மண்டபத்தின் கூரைகள் இடிந்து விழுந்ததில், பலரும் மண்டபத்தை விட்டு வெளியேற முடியாமல் போனது. இதனால், தீயில் கருகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீக்காயங்கள் மிகவும் தீவிரமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. திருமண விழாவில் பட்டாசு வெடித்த போது தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.