நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் முதல் சுரங்கம், இரண்டாவது சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம் ஆகிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும், 2-வது அனல் மின்நிலையம், 2-வது அனல் மின்நிலைய விரிவாக்கம், புதிய அனல் மின்நிலையம் ஆகிய 3 அனல் மின்நிலையங்களும் உள்ளன.
இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் புதிய அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பாய்லரில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாய்லரில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்த திருநாவுக்கரசு, தட்சிணாமூர்த்தி, செல்வராஜ், சுரேஷ், செந்தில்குமார் ஆகிய 5 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இன்கோசர்வ் தொழிலாளி திருநாவுக்கரசு நேற்று மாலை உயிரிழந்தார்.