சென்னை தீவுத்திடலில் 17-ம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னைதீவுத்திடலில் சிறப்பு பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 55 கடைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை சுற்றுலாத் துறை அறிவித்தது. ஒவ்வொரு கடையும் 3 மீட்டர் இடைவெளியில், 250 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகளுக்கு அருகே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீவுத்திடலில் சிறப்பு பட்டாசுக் கடைகள் வரும் 17-ம் தேதி திறக்கப்பட்டு விற்பனை தொடங்க உள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வாங்க தீவுத்திடலுக்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால், அதற்கேற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து கடைகளுக்கும் காப்பீட்டு வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள், விபத்து உள்ளிட்ட அவசர நேரங்களில் பொதுமக்கள் வெளியேறும் பிரத்யேக வழிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பட்டாசு விற்பனை 25-ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.