நடப்பு நிதியாண்டின் நிதி பற்றாக்குறை மொத்த பட்ஜெட்டில் 82.8% ஆக உள்ளதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, பிப்ரவரி மாத இறுதியில் கணக்கிடப்பட்ட அளவாகும். இதுவே, முந்தைய நிதியாண்டில் 82.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசாங்க தரவுகளின் படி, 2023 ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், இந்தியாவின் நிதி பற்றாக்குறை 14.54 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது 13.17 லட்சம் கோடியாக பதிவானது. மேலும், நிதியாண்டின் இறுதியில் 17.55 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது மொத்த ஜிடிபி யில் 6.4% ஆகும்.
பிப்ரவரி மாத இறுதி வரையில், வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 1732193 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்த நிதி ஆண்டிற்கு கணிக்கப்பட்ட தொகையின் 83% ஆகும். அதே வேளையில், மொத்த செலவினங்கள் 34.93 லட்சம் கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிதியாண்டுக்கு கணக்கிடப்பட்ட தொகையின் 83.4% ஆகும். எனவே, வரும் 2026 ஆம் நிதி ஆண்டுக்குள், நாட்டின் நிதி பற்றாக்குறையை 4.5% க்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயித்து, மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.