சேலம் - சென்னை விமான போக்குவரத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதில் சென்னை சேலம் இடையே செயல்பட்டு வந்த விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விமான சேவைகள் தொடங்கியது. ஆனால் சென்னை சேலத்துக்கு இடையே இயங்கி வந்த விமான சேவையை ட்ருஜெட் நிறுவனம் நிறுத்தி வைத்து இருந்தது. பின் பல்வேறு தரப்பினர் விமான சேவை தொடங்கும்படி கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சேலம் - சென்னை விமான சேவை தொடங்க முன் வந்தது. இதன்படி நேற்று முதல் சென்னை - சேலம் - சென்னை இடையில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. தினமும் சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 11:20 மணிக்கு புறப்படும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 12 மணிக்கு சேலம் கமலாபுரம் விமானம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து பகல் 12:50க்கு புறப்பட்டு சென்னையை பகல் 1:45 மணிக்கு சென்றடைகிறது. மேலும் சேலத்தில் விமானம் இறங்க போதுமான வசதிகள் இல்லாததால் சிறிய ரக விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வழி பயண கட்டணமாக ரூபாய் 2390 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் அதிகரிப்பை பொறுத்து கட்டணத்தில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.