இன்று, சென்னையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு விமானங்கள் தாமதிக்கப்பட்டுள்ளன. மேலும், சில விமானங்கள் பெங்களூருக்கு மாற்றி விடப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று காலை 7:30 மணிக்கு பின் திடீரென பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் துபாயில் இருந்து வந்த 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் சென்னை வான் பகுதியில் சுற்றி வந்தன. இந்நிலையில், துபாயில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்கும் படி மாற்றி விடப்பட்டன. மேலும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சில மணி நேரம் சென்னை வான் பகுதியில் சுற்றி வந்த நிலையில், மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பி விடப்பட்டது.