கடந்த மே 2021ல், சீனாவின் ஜூரோங் ரோவர் என்ற விண்கலம், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஏவப்பட்டது. சூரிய சக்தியில் இயங்கும் படி, ரேடார் தொழில்நுட்பத்துடன் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு இந்த தானியங்கி விண்கலம் வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகளை தற்போது கண்டுபிடித்துள்ளது. ஜூரோங் மார்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தின் உட்டோபியா பிளானிஷியா படுகையின் ரேடார் தரவை அனுப்பியுள்ளது. அதன் படி, பல ஆண்டுகளுக்கு முன்னர், அந்த இடத்தில் கடல் இருந்ததற்கான சாத்தியக் கூறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சீன அறிவியல் அகாடமி மற்றும் பீஜிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ரோவர் விண்கலத்தின் புகைப்படங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களது ஆய்வு, ஹெஸ்பெரியன் முதல் அமேசானியன் வரையிலான காலகட்டத்தில், செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்ற முடிவை எட்டியுள்ளது. செவ்வாயின் மேற்பரப்பில், பல துணை அடுக்குகள் காணப்படுவது, வெள்ளம் ஏற்பட்டதை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே இவ்வாறு பல அடுக்கு நிலைகளில் படிமங்கள் உண்டாகும். எனவே, இதன் வழியே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான சான்று கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள புகைப்படங்களின் படி, மேல் அடுக்கு 10 மீட்டர் ஆழமாகவும், இரண்டாவது அடுக்கு 30 மீட்டர் ஆழமாகவும், மூன்றாம் அடுக்கு 80 மீட்டர் ஆழமாகவும் உள்ளது. எனவே, இன்றைய நிலையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில், 80 மீட்டர் ஆழம் வரை தண்ணீர் இல்லை என்றாலும், அதற்கு அடியில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஜூரோங் மார்ஸ் ரோவரின் இந்த கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் வானியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.