காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் 61 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் மாத்திரை மருந்துகள் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 115 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வலி பாதிப்பு, காய்ச்சல், சளி, கால்சியம் குறைபாடு ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் 61 மருந்துகள் தர மற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவை இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த தகவல்கள் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.