சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதவர்களின் பொருட்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி செலுத்த வேண்டும். 12 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தி வரும் நிலையில் ஒரு சிலர் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். ரூ.5, 10, 20, 25 லட்சம் என பெருந்தொகை செலுத்தாமல் இருந்து வருவதால் அவர்களிடம் சொத்து வரியை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, தொழில் உரிமம் போன்றவற்றை முறையாக செலுத்தாதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் இருக்கும் பெருந்தொகையை வசூலிக்க ஜப்தி நோட்டீஸ் விரைவில் வழங்கப்படும். அதற்குள் செலுத்தி விட்டால் ஜப்தி நடவடிக்கை தவிர்க்கப்படும் என்றனர்.