தற்போது, சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் காவல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சைபர் வழக்கில் அவருக்கான நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று, பரிசு பொருள் வழக்கில் அவருடைய தண்டனை நிறுத்தப்பட்டது. எனவே, அவர் விரைவில் ஜாமீனில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, அவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்ததால், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. அதன் படி, இன்று காலை, பாகிஸ்தான் அரசு ரகசியங்களை வெளியிட்ட வழக்கு தொடர்பாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவரது காவல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.