துபாயிலிருந்து சுமார் 300 இந்தியர்களுடன் மத்திய அமெரிக்க நாட்டிற்கு சென்ற விமானம் திடீரென்று பிரான்சில் தரை இறங்கியது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய் விமான நிலையத்திலிருந்து 303 இந்தியர்களை ஏற்றுக்கொண்டு ருமேனியா விமானம் ஒன்று நிகாரகுவா நாட்டிற்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் பிரான்ஸ் எல்லை பகுதியில் பறந்த போது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானம் தரை இறக்க அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும் கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த சிலர் மனித கடத்தல் கும்பலால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது என அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து விமானம் மேற்கொண்டு பறக்க விடாமல் தடுத்தனர். அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் இந்திய தூதரகத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய தூதரகத்தின் விரிவான விசாரணைக்கு பின் இந்த விவகாரம் குறித்து மேலும் தகவல்கள் வெளிவரும். இவர்கள் அனைவரும் மத்திய அமெரிக்காவுக்கு பயணம் செய்து அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது கனடாவுக்கு செல்ல முயற்சி செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர். விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் இந்தியர்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.