50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். இதன் முதல் கட்டமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக மின்சாரத் துறை சார்பில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான இலவச மின் இணைப்பு ஆணைகளை இன்று காலை முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
அரவக்குறிச்சி அருகே கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் பகுதியில் இந்த விழா நடக்கவுள்ளது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கப்பட உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு படிப்படியாக ஆணைகள் வழங்கப்படும் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.