மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 26 முதல் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் ஷேகர் சென்னே கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மூத்த குடிமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு பிறகு வெளியூர் செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் 65 முதல் 75 வயது வரையுடையோர் 50 விழுக்காடு கட்டணத்தில் பயணம் செய்யலாம். முதியோர் கட்டணத்தில் இலவசமாகவோ, பாதி கட்டணத்தில் பயணம் செய்ய விரும்புவோர் ஆதார், ஃபேன், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இலவச பயணத் திட்டம் நகர பேருந்துகளுக்கு பொருந்தாது. வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்..
மகாராஷ்டிராவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தினந்தோறும் இயக்கப்படும் 16,000 பேருந்துகளில் 65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.