உணவு பாக்கெட்டுகளில் சத்து மற்றும் அளவு குறித்த விவரங்களை பெரிய எழுத்துக்களில் அச்சிட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் fssai உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த உத்தரவுக்கு அனுமதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்.
fssai தலைவர் அபூர்வா சந்திரன் தலைமையில் 44ஆவது சந்திப்பு நடைபெற்றது. அதில், 2020 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உணவு தர வழிகாட்டி முறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் சத்து விவரங்களை பெரிய எழுத்துக்கள் மற்றும் தடிமனான எழுத்துக்களில் அச்சிட உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. அண்மைக்காலமாக, fssai சார்பில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.