கர்நாடகாவில் முழு அடைப்பை ஒட்டி 80 ஆயிரம் போலீஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து நீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து கடந்த 26 ஆம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பை நடத்திய நிலையில் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு 1900 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்புக்கு அனுமதி இல்லை என அறிவித்திருந்தனர். இருப்பினும் கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஹோட்டல்கள், ஆகியவை மூடப்பட்டன. பால், மருந்து கடைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே செயல்பட்டது. வணிக வளாகங்கள் மார்க்கெட்டுகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று இரவு 12 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் அங்கு 80000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.