கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணம் திப்ருகரில் நிறைவடைந்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘எம்.வி. கங்கா விலாஸ்' என்கிற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு கப்பல் உலகின் நீளமான சொகுசு கப்பல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கியது. இந்த சொகுசு கப்பலின் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது புத்தகயா, விக்ரம் ஷிலா, சுந்தரவனக்காடுகள், காஜிரங்கா தேசியப்பூங்கா, வங்கதேசத்தின் டாக்கா வழியாக அசாமில் உள்ள திப்ருகரில் பயணத்தை முடிக்கும்வகையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன்படி இந்த சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு நேற்று மாலை வந்தடைந்தது. மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை சர்வானந்த சோனோவால் தலைமையில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.














