ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் திறமையான ஊழியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனது கதவுகளை ஜெர்மன் நாடு திறந்து வைத்துள்ளது. அதற்காக, சமீபத்தில், குடியேற்ற விதிகள் மற்றும் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் ஜெர்மனிக்கு பயணிப்பர் என்று கூறப்பட்டது. இதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுச் சூழலையும் மேம்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டது.
ஏற்கனவே, இலவச கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களால் ஜெர்மனி நாட்டிற்குச் செல்ல பல வெளிநாட்டினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஜெர்மனியின் சட்ட திருத்தமும் சாதக சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில், வேலைக்காக ஜெர்மனிக்கு செல்வோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதத்தில், புதிதாக ‘வேலை தேடுவோர்’ விசாவை (JobSeeker Visa) அந்த நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விசா மூலம், ஆறு மாத காலத்திற்கு ஜெர்மனியில் தங்கி இருந்து வெளிநாட்டினர் வேலை தேட முடியும். ஆறு மாத காலம் நிறைவடையும் பொழுது, ஒருவேளை வேலை கிடைத்து விட்டால், ஜெர்மன் நாட்டின் பணி விசா அல்லது ஒர்க் பர்மிட் வழங்கப்படும். மேலும், அவர்கள் தொடர்ந்து ஜெர்மனியில் தங்கி இருந்து பணி செய்யவும் அனுமதிக்கப்படுவர்.
இந்த வேலை தேடுவோர் விசாவைப் பெறுவதற்கான தகுதி குறித்தும் ஜெர்மன் நாடு விளக்கமளித்துள்ளது. அதன்படி, “குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஐந்து வருட துறை சார்ந்த வேலை அனுபவம் இருக்க வேண்டும். ஆறு மாத காலத்திற்கு ஜெர்மனியில் தங்குவதற்கு தேவையான நிதி இருப்பு இருக்க வேண்டும். பயணக் காப்பீடு அல்லது மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். இவற்றுடன் சேர்த்து வழக்கமான பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஜெர்மன் தூதரகத்தில் இந்த விபரங்களை சமர்ப்பித்து வேலை தேடுவோர் விசாவை பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.