பூமியின் வெப்பநிலை உயர்வு கிட்டத்தட்ட 3 டிகிரியாக உயரும் அபாயம் நிலவுவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த வாரம் ஐநா சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, கரிய அமில வாயு வெளியேற்றம் தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. அதன்படி, 2030 ஆம் ஆண்டுக்குள், தொழில் புரட்சிக்கு முன்பாக இருந்த வெப்பநிலையை விட 2.5 முதல் 2.9 டிகிரி செல்சியஸ் வரை உலகின் வெப்பநிலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில், பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது; ஆனால் அதற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக, கரியமில வாயு குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலான நாடுகளில் மிகவும் மெத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெப்பநிலை உயர்வால் இந்த ஆண்டு உலகம் மிகப் பெரிய பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில், உலகின் சராசரி வெப்பநிலை தொழில் புரட்சிக்கு முன்பு இருந்ததை விட 1.5 டிகிரி செல்சியஸ் -க்கும் கூடுதலாக இருந்தது. இது தொடரும் பட்சத்தில், மிகப்பெரிய பேரழிவுகள் நிகழலாம் என ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது.