கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,680 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களில் தொடர் உயர்வை சந்தித்து வந்தது. கடந்த 3ம் தேதி ஒரு சவரன் ரூ.68,480 என்ற உச்ச விலையை தொட்டது. அதன்பின் சில நாட்களுக்கு விலை குறைந்து மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. ஆனால் நேற்று தங்கம் விலை ஒரே நாளில் இரு முறைகள் உயர்ந்து, கிராமுக்கு ரூ.185, சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்தது. அதன்படி ஒரு சவரன் ரூ.67,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் விலை உயர்ந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.68,480-க்கு விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,680 உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த வரி நடவடிக்கையால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து முதலீடு செய்யத் தொடங்கியதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளி விலையும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கு, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,07,000-க்கு விற்பனையாகிறது.