சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து இன்று (பிப்.6) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமை, அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கச் செய்கின்றன. கடந்த டிசம்பர் 8 முதல் தங்கம் விலை மேலேறத் தொடங்கியது. ஜனவரி 3 அன்று ரூ.58,080 இருந்தது, ஜனவரி 16 அன்று ரூ.59,120 ஆக உயர்ந்தது. ஜனவரி 22-ம் தேதி முதல் ரூ.60,000-ஐ கடந்த நிலையில், கடந்த 29-ம் தேதி மீண்டும் அதிகரித்து, பிப்.1 அன்று ரூ.62,000-ஐ கடந்தது.
இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து, ரூ.7,930-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3,360 அதிகரித்துள்ளது. 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.69,200-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை உயர்வதால் நகை வாங்குபவர்கள் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.