கூகுள் நிறுவனம், 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் சுற்று பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளின் பகுதியாக கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதாக கூறி பல ஊழியர்களை நீக்கி வருகிறது. தற்போது, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரூத் போராட், ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் அடுத்த சுற்று பணி நீக்கம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் செயற்கை நுண்ணறிவு நோக்கி நிறுவனம் நகர்ந்து வருவதால் பணி நீக்கத்தை தவிர்க்க முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், தகுதி வாய்ந்த ஊழியர்களை இழப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். எத்தனை ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், நிதித்துறை சார்ந்த ஊழியர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. உலகளாவிய முறையில், அனைத்து பகுதி ஊழியர்களையும் பாதிக்கும் வகையில் இந்த பணி நீக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.