தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் பணி நீக்கம், ரோபோக்களையும் விட்டு வைக்கவில்லை. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், 'எவ்ரிடே ரோபோட்ஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை இயக்கி வந்தது. தற்போது, இது நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது முழுமையாக நீக்கப்படாது எனவும், இதில் உள்ள சில பணியாளர்கள் மற்றும் சில தொழில்நுட்பங்கள் கூகுளின் இதர ரோபோட்டிக் ப்ராஜெக்ட்களில் பணியமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தனியாக ஒரு நிறுவனமாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'எவ்ரிடே ரோபோட்ஸ்' நிறுவனம், வழக்கமான, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ரோபோக்களுக்கு பயிற்சி அளித்து, பணியில் ஈடுபடச் செய்து வந்தது. கதவுகளைத் திறந்து மூடுவது, இருக்கைகளை ஒழுங்கு படுத்துவது, மேசைகளை சுத்தப்படுத்துவது, குப்பைகளை முறைப்படுத்துவது போன்ற பணிகளுக்கு இந்த நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக கூகுள் நிறுவனத்தில் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பகுதியாக, இந்த நிறுவனத்தின் ரோபோக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் டாலர்கள் செலவிட வேண்டியதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கூகுள் நிறுவனம் ரோபோக்கள் உருவாக்கத்தை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.