டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளில் கூகுள் பே முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கூகுள் பே பயனர்கள் பலருக்கு செயலி மூலம் இலவசமாக பணம் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. கிட்டத்தட்ட 1072 டாலர்கள் வரை, பல்வேறு தொகைகள் இலவசமாக வந்தடைந்துள்ளன. தற்போது, இது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, புதிய பரிவர்த்தனை சேவை ஒன்றை நிறுவனம் சோதனை செய்து வருகிறது. அந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தடையவில்லை. கூகுள் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சோதனை ஓட்டத்தின் போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஊழியர்களின் கணக்குகளுக்கு பதிலாக, பொதுமக்களின் கணக்குகளில் பணம் சென்றடைந்துள்ளது. எத்தனை பேருக்கு பணம் சென்றடைந்தது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. செலுத்தப்பட்ட தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் கூகுள் நிறுவனம் இறங்கி உள்ளது. முழுமையாக அனைவரிடமிருந்தும் பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், பயனர்களே அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.