இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாத நிலையில் இருக்கும் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக 'இன் ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ்' பிரிவில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. அதற்குள்ளாக, சம்பந்தப்பட்ட பயன்படுத்தப்படாத கணக்குகளுக்கு, நீக்கப்படுவது சார்ந்த எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
இதுவரையில், பயன்படுத்தப்படாத கணக்குகளின் தரவுகள் மட்டுமே கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்டு வந்தது. தற்போது, மொத்த கணக்கையும் நீக்குவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கூகுள் கணக்கு நீக்கப்படும்போது, அதன் சார்பில் பயன்படுத்தப்பட்ட ஜிமெயில், டாக்குமெண்ட், யூட்யூப், போட்டோஸ், காலண்டர், டிரைவ் போன்ற பல்வேறு தளங்களின் தரவுகள் நீக்கப்படும். எனவே, தங்கள் தரவுகளை பாதுகாக்க, பயனர்கள் 24 மாதத்திற்கு ஒரு முறை, தங்கள் கணக்குகளில் உள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.