கூகுள் நிறுவனத்தின் கூகுள் வாலட் செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த செயலி பயன்பாட்டுக்கு வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் இன்புட் அவுட்புட் டெவெலப்பர் மாநாட்டில் கூகுள் வாலட் செயலி முதன் முதலில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், நம் கையில் வைத்திருக்கும் பிசிக்கல் வாலட் மூலம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. அதாவது, டிஜிட்டல் வடிவில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு, கிப்ட் கார்டுகள், சினிமா டிக்கெட், போர்டிங் பாஸ் போன்றவற்றை சேமித்துக் கொள்ளலாம். இதனை மற்ற கூகுள் செயலிகளுடன் ஒன்றிணைத்து இயக்க முடியும். அதாவது, வாலட் செயலியில் உள்ள பேருந்து டிக்கெட் மூலம், கூகுள் மேப் உதவியுடன் சென்றடைய வேண்டிய இடத்தை தெரிந்து கொள்ளலாம். ஜிமெயிலில் உள்ள டிக்கெட் விவரங்களை இந்த செயலி வழியாக காண முடியும். மேலும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்களை இந்த செயலியில் சேமித்து பயன்படுத்த முடியும். கூகுள் பே செயலிக்கும் கூகுள் வாலட் செயலிக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. கூகுள் வாலட்டில் பேமெண்ட் அம்சம் கிடையாது.