வரும் டிசம்பர் 1ம் தேதி முதல், பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நீக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பயனர் கணக்குகள் கொள்கையை மே மாதம் கொண்டு வந்தது. அதன்படி, 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை நிரந்தரமாக நீக்கி வருகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மூலம், சைபர் குற்றங்கள் பெருமளவு குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சைபர் குற்றவாளிகள், பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை தவறான முறையில் கையாண்டு வருவதாக கருதப்படுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 1 முதல், முந்தைய 2 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத கணக்குகள் நீக்கப்பட உள்ளன. எனினும், தனிநபர் அல்லாத நிறுவனங்களின் செயல்பாடற்ற கணக்குகள் நீக்கப்படாது என கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் தளத்தில் தகவல் தேடுவது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, மின்னஞ்சல் பயன்படுத்துவது மற்றும் இதர கூகுள் சேவைகளை பயன்படுத்துவது ஆகியவை கூகுள் கணக்கை பயன்பாட்டில் வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














