கோபுரங்கள்

தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - கோபுரங்கள் தமிழர்களின் கட்டிடக் ...

தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - கோபுரங்கள்

தமிழர்களின் கட்டிடக் கலையின் உச்சமாகக் கோவில் கோபுரங்கள் இருக்கின்றன. கோயில்களின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் கோபுரங்கள், தமிழரின் சிற்பக் களஞ்சியங்களாக விளங்குகின்றன. மேலும், அவை வெறும் காட்சிக்காக மட்டுமில்லாமல் பல விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு பட்டைக்கூம்பு (பிரமிட்) போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் கோபுர அமைப்பு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்டத் தளங்களாக இருக்கிறது. பல ஆண்டுகளாகவே, கோபுரங்கள் ஒரு தானியக் களஞ்சியமாகவும் இடி தாங்கியாகவும் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து. இன்றைய நிலையில், ஒரு தளம் கொண்ட கோபுரம் முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை தமிழ்நாட்டில் உள்ளன.

உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் மரபு தமிழகத்தில் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அறியப்படுகிறது. அதற்கு முன்னர் உள்ளக் கோவில்களில் கருவறையின் மேலுள்ள விமானத்தை உயர்ந்ததாக அமைக்கும் வழக்கமே இருந்தது. உதாரணத்திற்குத் தஞ்சைப் பெரியக் கோவிலில் கோபுரத்தை விட விமானமே உயர்வாக இருக்கும். மேலும், அக்காலத்தில் இருந்த புத்த விஹாரைகளின் விமானமும் உயர்ந்து இருக்கும். ஆனால் அவற்றின் நுழைவு வாயில் சிறியதாகவே இருக்கும். இலக்கியங்களும் காப்பியங்களும் இதை உறுதி செய்கின்றன.

கி.பி 1100 அளவில் தொடங்கியப் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கோவிலின் நுழைவு வாயில் அமைப்பைப் பெரிதாக்கி, விமானத்தைச் சிறியதாக வைக்கும் மரபு வந்தது. இந்தியக் கட்டிடக்கலைப் பற்றிய நூலொன்றை எழுதிய பேர்சி பிரவுண் என்பவர், பிற்காலப் பாண்டியர் காலத்தில், பழங்காலம் முதல் புனிதமாகக் கருதப்பட்டப் பலக் கோவில்கள் அளவில் சிறியதாக இருந்தன என்றும் கட்டிடக் கலையில் மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தத் தமிழர்கள், அவர்களின் திறனை வெளிக்காட்டும் வண்ணம் கோவில்களைச் சுற்றிலும் பெரிய மதில் அமைத்து, நுழைவு வாயில் கோபுரங்களைப் பெரிதாக அமைக்கத் தொடங்கினர் என்றும் சொல்கிறார். மேலும், கருவறை என்பது புனிதமாகக் கருதப்பட்டதால், அதை அப்படியே வைத்து விட்டு, கோவிலின் சுற்றுப்புற அமைப்புகள், பிரகாரங்கள், மண்டபங்கள், நுழைவு கோபுரங்கள் ஆகியவற்றில் சிறப்பானக் கட்டிட அமைப்புகள் உருவாக்கும் வழக்கம் வந்ததைப் பற்றியும் அந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.

கோபுரம் என்ற அமைப்பு சங்க காலத்திற்குப் பின்னர் தோன்றிய மரபு என்பதால், சங்க இலக்கியங்களில் இது பற்றி இடம்பெறவில்லை. ஆனால், தேவாரம் முதலிய பக்தி இலக்கியங்களில் கோபுர அமைப்பு பற்றி சொல்லப்பட்டிருப்பது, அந்தக் கட்டிடக்கலை பத்தாம் நூற்றாண்டு சமயத்தில் எழும்பிய வரலாற்றை உறுதி செய்கிறது. இறைவன் உறையும் இடம் என்று பொருள்படும் வகையில் அது, ‘கோ (இறைவன்) + புரம் (இருப்பிடம்)' என்பதாக ‘கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகக் கோவில்களில் உள்ள, சிறப்பு வாய்ந்த சில கோபுரங்கள் பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்கள் இதோ:

  • தமிழ்நாட்டில் காணப்படும் காலத்தால் முந்திய கோபுரம், பல்லவர் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவிலில் உள்ள கோபுரம் ஆகும். இது அளவில் சிறியதாக இருந்தாலும் மிகப் பழமையானதாக அறியப்படுகிறது .
  • 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் 11 அடுக்குகளைக் கொண்டதாகும். 193 அடி உயரமான இந்தக் கோவிலின் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். பெரியாழ்வார் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றி கொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்று நம்பப்படுகிறது.
  • உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் பழமையான நகரமாக அறியப்படும் மதுரையின் மையமாக இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாகும். இந்தக் கோவிலைச் சுற்றி நான்கு திசைகளுக்கு ஒன்றாக, நான்கு பெரிய, அழகிய கோபுரங்களைக் கொண்ட நுழைவு வாயில்கள் மற்றும் 10 பிற கோபுரங்கள் என மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. இவற்றுள் 1559-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்குக் கோபுரம் மிகவும் உயரமானதாகும் (170 அடி). கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், குலோத்துங்க சோழரின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மொத்தம் 16 கோபுரங்கள் இருப்பதுடன், இதன் ராஜகோபுரம் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோபுரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோவிலாகும். அவைகளில் ராஜகோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவைக் குறிப்பிடத்தக்கனவாகும். அவற்றோடு, தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய 3 சிறிய கோபுரங்கள் உள்ளன. கிழக்கில் அமைந்துள்ள கோபுரம் ராஜ கம்பீரமாக 217 அடி உயரத்தில், தமிழகத்தின் 2-வது உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகிறது. இது விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணதேவராயரால் கட்டத் துவங்கப்பட்டு, நாயக்கர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டதாகும்.
  • ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலின் ராஜ கோபுரமாகும். மொத்தம் 21 கோபுரங்களைக் கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரமாகும். இக்கோவிலின் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த ராஜ கோபுரம் மட்டும் 1987 ஆம் ஆண்டு, அஹோபிலம் மடத்தால் கட்டி முடிக்கப் பட்டது.
  • திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுரம் 192 அடி உயரத்தில் தமிழகத்தின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் ராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இந்தக் கோபுரம் 192 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
  • தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் கோபுரம் கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீக்கிரையாகி, 1967 வரை மொட்டையாய் பொலிவிழந்து நின்றது. பின்னர் 1963-ல் இராஜகோபுரத் திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990-ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் கோவில் கோபுரங்களின் அழகை வார்த்தைகளால் கூற முடியாது. வெளியில் சிற்பக் களஞ்சியமாகத் தோன்றும் இவை, உட்புறத்தில் தானியக் களஞ்சியங்களாகச் செயல்பட்டு வந்திருப்பது தமிழரின் கட்டிடக்கலை நுணுக்கத்தின் சிகரமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!!!

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu