தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்துகிறது. அவ்வகையில் கடந்த 14-ந்தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கறிஞர் (Grade-II) பதவிக்கான தேர்வு 15 மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த தேர்வில் 4,186 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி அந்த தேர்வை ரத்து செய்துள்ளது. சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், சில தேர்வர்கள் தேர்வை முழுமையாக முடிக்க முடியவில்லை. இதனால், அந்த தேர்வர்கள் மறுதேர்வு நடத்த கோரிக்கை எழுப்பினார்கள். இந்த கோரிக்கையை டி.என்.பி.எஸ்.சி பரிசீலித்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட கணினி முறை தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.மேலும், அந்த தேர்வினருக்கான மறுதேர்வு 2025ம் ஆண்டு பெப்ரவரி 22-ந்தேதி ஒளிக்குறி உணரி (OMR) முறையில் நடைபெற உள்ளது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள், ஏற்கனவே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டுமே, தனியாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் அறிவித்துள்ளார்.