60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக முருகனின் அறுபடை வீடுகள் தரிசனம் செய்யும் அரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2025-26ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் என போற்றப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களுக்கு 60 முதல் 70 வயதுக்குள் உள்ள 2,000 மூத்த குடிமக்கள் இலவச ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்த பயணத்தில் பங்கேற்க விரும்பும்வர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், அவர்களது ஆண்டு வருமானம் ₹2 லட்சத்துக்கு கீழாக இருக்க வேண்டும் என்பதோடு, அதற்கான வருமானச் சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெறவேண்டும். உடல்நலத்திற்கேற்ப பயணம் செய்யும் திறன் இருப்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழும், ஆதார் அட்டையின் நகலும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த பயணத்துக்கான விண்ணப்பங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ, அனைத்து சான்றுகளுடன் கூடிய விண்ணப்பத்தை 15.09.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயண விவரங்களுக்கு 1800 425 1757 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். தகுதியுடைய மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.