தமிழகத்தில் பெண்கள், பள்ளி மாணவர்கள், மாற்று திறனாளிகள் என பலர் இலவச பயணம் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக மொத்தம் 19000 பஸ்கள் இயங்குகிறது. இதில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது போக்குவரத்து கழகம் ஆண்டுக்கு ஆண்டு மிகவும் மோசமான சூழ்நிலையில் இயங்கி வருகிறது. அரசு பஸ்களில் தினமும் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றன. 35 லட்சம் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கட்டணம் இன்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கியதை தொடர்ந்து சுமார் 55 லட்சம் பயணிகள் தினமும் சராசரியாக பயணித்து வருகிறார்கள். இவை தவிர 40 லட்சம் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் விலை உயர்வு மூலம் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. தினமும் 25 கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் சம்பளம், படி, டீசல் செலவு ஆகியவற்றை கணக்கிட்டால் தினமும் ரூபாய் 15 கோடி நட்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.