சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட காலம் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆளும் பிஆர்எஸ் கட்சி, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதக்களுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் முடிந்த வரையில் விரைவில் ஒப்புதல் தர வேண்டும். அல்லது மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு உரிய கூடுதல் தகவல் வழங்கக் கோரி அதை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ‘கூடிய விரைவில் ஒப்புதல்’ என்ற இந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதை ஆளுநர்கள் மனதில் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.