மத்திய அரசு சார்பில், வரும் 2024-25 ஆம் ஆண்டிற்குள், சுமார் 22900 கோடி மதிப்பில், 44 துறைமுகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். மேலும், துறைமுகம், கப்பல் கட்டுமானம் மற்றும் நீர் வழி போக்குவரத்து ஆகியவற்றை சார்ந்து, அடுக்கடுக்கான பல திட்டங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகியவை இணைந்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
அமைச்சர் சோனோவால் கூறியதாவது: “நேஷனல் மானிட்டைசேஷன் பைப்லைநின் கீழ், 12222 கோடி மதிப்பில் 22 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் காடி சக்தி திட்டத்தின் கீழ் 56831 கோடி மதிப்பில் 101 திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் 4423 கோடி மதிப்பிலான 13 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 9 திட்டங்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும். இந்நிலையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து, 191 துறைமுக இணைப்பு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் மூலம் சரக்கு போக்குவரத்து எளிமையாக்கப்படும்” என்று கூறினார்.