இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகம், செவ்வாய்க்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 800 கோடி ரூபாய் மதிப்பில், 7432 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பெருமைமிகு இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான நிதி வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, 70% நிதி, அதாவது 560 கோடி ரூபாயை அமைச்சகம் விடுவித்துள்ளது. இது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு முதல் தவணையில் வழங்கப்பட உள்ளன. நிலையங்கள் அமைப்பதற்கான பணி மார்ச் 2024 ல் நிறைவடையும் என்று கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில், நாட்டில் 6586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 7432 அளவில் கூட்டப்பட்டு, மொத்தம் 14018 ஆக உயர்த்தப்படவுள்ளது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் இந்த நிலையங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.