சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2023-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் மியாமி நகரில் சர்வதேச பசுமை உலக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 24-ந்தேதி நடந்தது. இதில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2023-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது.
கட்டுமானம் மற்றும் பல்வேறு செயல்பாடுகளின் போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.