கொய்யா மரத்தின் தாயகம் தென்அமெரிக்காவாகும். பதினாறாம் நூற்றாண்டில் கொய்யா, தென் அமெரிக்காவிலிருந்து வணிகர்களால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்று, அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இது மிர்ட்டேசியே என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய வகை மரமாகும். ப்சிடியம் கோஜாவா என்பது கொய்யா மரத்தின் தாவரவியல் பெயராகும். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளின் தட்ப வெப்ப நிலை இந்த மரம் வளர்வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளதால், இங்கு கொய்யா மிக அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், கொய்யாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் முதலிடத்தில் இந்தியா உள்ளது.
கொய்யா மரத்தின் இலை, காய், கனி, பட்டை என எல்லா பாகங்களும் பயன்படக் கூடியது. யுனானி மற்றும் சித்த மருத்துவ முறை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவையாகும். ஆனால், கொய்யா மரத்தின் சிறப்புகளை 16ஆம் நூற்றாண்டிலேயே கண்டுணர்ந்ததால், மருத்துவ அறிஞர்கள் மூலம் கொய்யா இந்திய-யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில் சேர்க்கப்பட்டது. கொய்யாவின் நன்மைகளை
“திரிதோஷஞ் சென்னித் திருப்ப மரோசி
பெருமாந்தம் வாந்தி பொருமல் - கரப்பானு
மெய்யாய்ப் பரவுமல மேத்தவிடும் போகமுண்டாங்
கொய்யப் பழத்தினார் கூறு”
என்ற ‘பதார்த்தகுண சிந்தாமணி’ பாடல் விளக்குகிறது.
நவீன அறிவியல் மூலம், கொய்யாவில் வைட்டமின் ‘சி’, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, எரியம், மாவுசத்து, தாதுச்சத்து, புரதம், கொழுப்பு போன்ற பல சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை முன்பே உணர்ந்ததால், கொய்யாவைக் கொண்டு, பல மருத்துவக் குறிப்புகளை நமது முன்னோர்கள் தந்துள்ளனர். அவற்றில் சில:
- அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. ஒரேயொரு கொய்யாவில் ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 12 சதவிகிதம் கிடைப்பதால், குடலின் செயல்திறன் அதிகரித்து, செரிமானம் துரிதமாக நடக்க உதவுகிறது. கொய்யாவின் விதைகள் சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கலிலிருந்து காக்கின்றன. எனவே, நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், வாந்தி, தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். - கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறையும்.
- வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் சி கொய்யாவில் அதிகளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்குக் கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற கொய்யா உதவுகிறது. பற்களின் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவற்றின் சிகிச்சையில் கொய்யா பயன்படுத்தப்படுகிறது.
- கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்குப் பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாகச் சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களைச் சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை.
- கொய்யாவிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
- கொய்யாவில் உள்ள சர்க்கரையின் அளவு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட மற்றப் பழங்களைவிட மிகக் குறைவு. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது.
- கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ பார்வைத்திறனை மேம்படுத்தும்.
கொய்யா மிக எளிதாகக் கிடைப்பதால் நாம் அதனை எளிதாக புறக்கணிக்கும் மனநிலையில் இருக்கிறோம். எனவே, இதன் சிறப்புகளை உணர்ந்து, உணவாக உண்டு, உடல் நலம் காப்போம்.