பிரதமர் மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்ததற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆமதாபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை தனக்கு வழங்க உத்தரவிடக்கோரி, தலைமை தகவல் ஆணையரிடம் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அந்த வழக்கில் தற்போது நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க குஜராத் பல்கலைக்கழகத்தை அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங்கும் அவதூறாகவும், கேலியாகவும் விமர்சித்ததால், மக்களிடையே அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து நீதிபதி சோவாடியா, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், சஞ்சய் சிங்குக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இருவர் மீதும் அவதூறு வழக்குக்கான முகாந்திரம் இருப்பதாக அவர் கூறினார். மே 23-ந் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அரவிந்த் கெஜ்ரிவால், தனிப்பட்ட அந்தஸ்தில் கருத்து தெரிவித்து இருப்பதால், வழக்கில் அவரது பெயருக்கு முன்பு உள்ள 'முதல்-மந்திரி' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் கூறினார்.