இந்தூரில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரின் 92-வது லீக் போட்டியில் உத்தரகண்ட் மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி உத்தரகண்டை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது. இதில் உத்தரகண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஆதித்ய தாரே மற்றும் ரவிக்குமார் சமத் இருவரும் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினர். குஜராத் தரப்பில் விஷால் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தப் போட்டியில், பரோடாவைச் சேர்ந்த 26 வயதான குஜராத் வீரர் உர்வில் படேல், 41 பந்துகளில் 115 ரன்கள் விளாசி அசத்தினார். இது அவரது இரண்டாவது தொடர்ச்சியான டி20 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 40 பந்துகளுக்குள் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை உர்வில் படேல் பெற்றுள்ளார். மேலும், உர்விலின் இந்த சாதனை குஜராத் அணிக்கு தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. கடந்த 2018 இல் உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான உர்வில், 2022 டிசம்பரில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த அணியில் விளையாட வாய்ப்பு பெறவில்லை. 2024 ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு விற்கப்படாமல் போனாலும், தற்போது தனது ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.














