ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், சுமார் 208 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த கிரையோஜனிக் இன்ஜின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம், இஸ்ரோவிற்கு தேவையான ஒட்டுமொத்த ராக்கெட் என்ஜின் தயாரிப்பும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இதனை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நாடுகளாக இருந்தன. கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜிஎஸ்எல்வி டி5 இல் கிரையோஜெனிக் இன்ஜினை பொருத்தி, இந்தியா கிரையோஜெனிக் நாடுகள் பட்டியலில் இணைந்தது. தற்போது அதன் உற்பத்தியை எச்ஏஎல் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இந்த கிரையோஜனிக் இன்ஜின் உற்பத்தி திட்டத்திற்காக, சுமார் 4500 சதுர மீட்டர் பரப்பளவிலான நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு, 70 அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிரையோஜனிக் உற்பத்தி, இந்திய ராக்கெட்டுகளுக்கு தேவைப்படும் செமி கிரையோஜனிக் இன்ஜின்களின் சோதனை போன்றவை இங்கு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு, எச்ஏஎல் நிறுவனம், இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன் பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு, கிரையோஜனிக் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான திட்டம் குறித்து இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. தற்போது, வரும் மார்ச் 2023 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எச்ஏஎல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பாக, ஏற்கனவே, திரவ புரோபெல்லன்ட் தாங்கிகள், பிஎஸ்எல்வி கான வாகன வடிவமைப்பு, ஜிஎஸ்எல்வி கான கட்டமைப்பு போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் வரிசையில், தற்போது, ராக்கெட் என்ஜின் உற்பத்தியும் சேர உள்ளது.