இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களுக்கு ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த 6 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 14 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, அவர்களுக்கு தலா இலங்கை பணம் ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.1.30 லட்சம்) அபராதமாக விதித்து, அதை செலுத்த முடியாவிட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு இலங்கை அரசுடைமை ஆக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.2½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை ரூ.4½ லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.