நீலகிரியில் கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் உறைபனியும், குளிரும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது பனிமூட்டமும், குளிர்ந்த காலநிலையும் நிலவுகிறது.
அதிகாலையில் தொடங்கும் கடும் பனிமூட்டமானது காலை 11 மணி வரை நிலவுகிறது. இதன் காரணமாக காலை நேரமே இரவு போன்றே காட்சியளிக்கிறது. இன்று காலை நேரத்திலேயே கடும் மேகமூட்டம் ஏற்பட்டு சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மேகம் சூழ்ந்து சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது. கடும் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்களும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. தொடர்ந்து மேகமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவி வருவதால் கடும் குளிர் நிலவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.