தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, சென்னையில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. மேலும், மெட்ரோ ரயில் பணிகள், சாலை பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. எனவே, வான் போக்குவரத்தில் ஈடுபட்டு, ஏர் டாக்ஸி சேவை கொண்டு வர டிட்கோ திட்டமிட்டுள்ளது. அண்மையில், இது தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில், குறுகிய தூர விமானங்களை இயக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை பெருநகரப் பகுதிக்குள் பாதுகாப்பான வான் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அடுத்த ஓராண்டுக்குள், சென்னையில் ஹெலிகாப்டர் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பிற நகரங்களை இணைக்கும் வகையில் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.