கடந்த 2023 ஜனவரியில் அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சுமத்தியது. இதனால், அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. அதானி குழுமத்தின் மீது சுமத்திய குற்றங்களை விசாரிப்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதானி குழுமத்திற்கு ஆதரவாக இது அமைந்தது. இந்த நிலையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்கு இது தொடர்பான விளக்கம் அளிக்குமாறு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.
சோக்காஸ் நோட்டீஸ் குறித்து ஹிண்டன்பர்க் வலைப்பதிவில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவில் உள்ள சக்தி வாய்ந்த நபர்கள் அவர்கள் செய்யும் மோசடிகளை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மீது அழுத்தம் மற்றும் மிரட்டல் விடுக்கின்றனர். இது, அத்தகைய செயல்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் விவகாரம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதால், அதானி குழும பங்குகள் மீது கவனம் குவிந்து வருகிறது.