உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பல் எனும் இடத்தில் மெஹக் என்ற உணவகத்தை தலிப் ஹுசைன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா யுவா மோர்சாவின் உறுப்பினர் ஹிமான்ஷு கசப், ’சம்பலில் உள்ள மேஹக் உணவகத்தில், இறைச்சியை கடவுள் படம் உள்ள செய்தித்தாளில் மடித்து தருகிறார்கள். கடவுள் படம் உள்ள 100 மேற்பட்ட செய்தித்தாள் அங்கே இருக்கிறது. இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ட்வீட் செய்திருக்கிறார் .
இந்த ட்வீட் பதிவு செய்யப்பட்டதையடுத்து இக்கடையின் உரிமையாளர் ஹிசைன் தலிப் கைது செய்யப்பட்டார். பின்னர் இரண்டு பிரிவினருக்கும் கலகம் மூட்டுவது 153ஏ , மத நம்பிக்கைகளை காயப்படுத்துவது 295ஏ, கொலை செய்ய முயல்வது 307 உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள தலிப் ஹுசைன் மகன் ‘நாங்கள் இக்கடையை பல வருடங்களாக நடத்தி வருகிறோம். இறைச்சியை, அலுமினியம் கவரில்தான் மடித்துகொடுப்போம். சாப்பாத்தியை மட்டுமே செய்தித்தாளில் மடித்து கொடுப்போம். அதிலும் எந்த கடவுளின் படங்களும் இடம் பெறாது” என்று கூறியுள்ளார். மேலும் உணவகத்தில் வேலை செய்பவர்களும் இதையே கூறினர். அப்பகுதியில் கடை வைத்திருக்கும் மற்ற உரிமையாளர்களும் ஹுசைன் தலிப் மிகவும் நல்லவர் என்றே கூறினர். இதற்கிடையில் தலிபின் குடும்பத்தினர் சட்டரிதியாக போராடி தலிப்பை விடுதலை செய்ய உள்ளனர்.