ஜப்பானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய கார் உற்பத்தியாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் ஒரே குடையின் கீழ் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டாவை சவால் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிசான் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனமும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக இந்த கூட்டணி உருவாக உள்ளது.
ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள், கூட்டணி தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், மின்சார வாகனங்கள் தயாரிப்பில் சீனா நாடு வேகமாக முன்னேறி வருவதால், இதற்கு போட்டியாக ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் இணைந்து மின்சார வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன. 2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களில் 65 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத மின்சார வாகனங்களை மட்டுமே தயாரிக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.