முற்றிலும் தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டை இளம் தலைமுறையினர் விளையாடுவது எப்படி? ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது? என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்பவர் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது மகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் கடந்த 6ம் தேதி முதல் தனது மகளை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனது மகள் ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி மற்றும் ஃபிரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை அதிக ஆர்வத்துடன் விளையாடுவாள் என்றும் , அந்த விளையாட்டின்போது பழகிய ஆண் நண்பர்கள் தான் தனது மகளை கடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனது மகளை மீட்டுத்தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, ஃபிரீ ஃபயர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள் தடை விதிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாக ஆகிறது. இருப்பினும், இளைஞர்கள், மாணவிகள் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டு ஆன்லைனில் எவ்வாறு கிடைக்கிறது? என கேள்வி நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதோடு இத்தகைய விளையாட்டுகளுக்கான தடையை முழுமையாக அமல்படுத்துவது குறித்து விரிவாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.