முன்னணி செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ஹுகீஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா, இந்திய அரசின் இஸ்ரோவுடன் இணைந்து, உயர் செயல்திறன் கொண்ட செயற்கைகோள் சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம், அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்குகிறது. தரைவழி தடங்கள் எட்ட முடியாத இடங்களிலும், இணையச் சேவை வழங்குவது இந்த நிறுவனத்தின் சிறப்பாகும். தற்போதைய நிலையில், இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. அத்துடன், சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில், இந்திய பாதுகாப்பு படையினருக்குத் தேவையான சேவையை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
தற்போது, இஸ்ரோவின் Gsat 11 மற்றும் Gsat 29 ஆகிய செயற்கை கோள்களின் துணை கொண்டு, இந்தியாவில் உயர்திறன் கொண்ட அதிவேக ப்ராட்பேண்ட் சேவை வழங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவின் செயற்கைக்கோள்களுடன் ஹுகீஸ் நிறுவனத்தின் ஜூபிடர் தரை தொழில்நுட்பம் இணைக்கப்படுவதன் மூலம் இது சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "இந்திய மக்கள் அனைவருக்கும் உயர்தர டிஜிட்டல் சேவை வழங்குவதற்காக நாங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினோம். அந்த வகையில் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது" என்று கூறினார்.
ஹுகீஸ் இந்தியாவின் தலைவர் சிவாஜி சட்டர்ஜி இது குறித்து பேசுகையில், "கடந்த வருடத்தில், நாங்கள், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் எங்களது சேவையை வழங்கி வந்தோம். தற்போது இஸ்ரோவின் செயற்கைக்கோள் துணை கொண்டு எங்களது சேவையை இந்தியா முழுவதும் விரிவாக்க எண்ணுகிறோம்" என்று கூறினார். ஹுகீஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பர்த்தோ பானர்ஜி கூறுகையில், "உயர் செயல்திறன் கொண்ட இந்த இணைப்பு மூலம், அரசாங்கத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தேவையான அதிவேக இணைப்பு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.