உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக மும்பை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹூருன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீன தலைநகர் பீஜிங்கில் 91 கோடிஸ்வரர்கள் உள்ளனர். அதுவே, இந்தியாவில் உள்ள மும்பையில் 92 கோடீஸ்வரர்கள் உள்ளனர். அதன்படி, முதல் முறையாக, ஆசிய அளவில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. மேலும், உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மும்பையில் உள்ள கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 445 பில்லியன் டாலர்கள் ஆகும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% உயர்வாகும். மேலும், அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடு என்ற பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 271 கோடீஸ்வரர்கள் உள்ளனர். அத்துடன், 94 இந்திய கோடீஸ்வரர்கள் நிகழாண்டு பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், முறையே 814 மற்றும் 800 கோடீஸ்வரர்கள் பெற்று முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.