ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹைதராபாத் பாலாப்பூர் விநாயகரின் கையில் லட்டு பிரசாதம் வைக்கப்படும். 10 நாட்கள் பூஜைகள் நடந்த பின்னர், விஜர்சனம் செய்யப்படும் நாளன்று அந்த லட்டு பிரசாதம் ஏலம் விடப்படும்.
அதன்படி நேற்று ஹைதராபாத் நகரில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஹுசேன் சாகர் ஏரி உட்பட பல நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் பாலாப்பூர் விநாயகர் சிலை ஊர்வலமும் நேற்று நடந்தது. ஊர்வலம் தொடங்கியதும், லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது. இதனை ஏலம் எடுக்க பலர் பங்கேற்றனர். இறுதியில் கணேஷ் உற்சவ கமிட்டி உறுப்பினரான லட்சுமி ரெட்டி என்பவர் அந்த லட்டு பிரசாதத்தை ரூ.24.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார். அப்போது அமைச்சர்கள் சபீதா இந்திரா ரெட்டி, தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் உட்பட பலர் உடனிருந்தனர்.
முதன் முதலில் கடந்த 1994-ல் லட்டு பிரசாதம் ரூ.450-க்கு ஏலம் போனது. இதனை தொடர்ந்து லட்டு பிரசாதம் ஏலம் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போனது.